Saturday, November 27, 2010

உங்கள் தற்கொலைக்கு - நான்தான் காரணமா ?


"தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்" "மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்" 

காதல், கடன், வன்கலவி இவற்றின் வரிசையில் தற்கொலைக்குத் தூண்டும் காரணிகளில் ஒன்றாய் தேர்வு முடிவுகளும் இருக்கும் அவலம்ம் நம் நாட்டில் மட்டும் தானா?

இதோ நாம் சந்தோஷமாய்ச் சிரித்துக் கொண்டிருக்கிற நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்கிற, ப்ளாக் வாசித்து கொண்டோ, காதலித்துக் கொண்டோ, பொழுது போக்கிக் கொண்டோ இருக்கின்ற இந்த கணங்களில் எங்காவது யாராவது நெஞ்சம் வெடிக்கும் வேதனையிலும் விரக்தி மற்றும் வெறுப்பைச் சுமந்தபடியும் சாவதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருப்பார்களோ என்ற எண்ணம் அதிபயங்கரமாகவும் தாங்க முடியாததாகவுமிருக்கிறது.


நமது உயிரை நாமே பறித்துக் கொள்ளும் திறனோடு நாம் பிறந்திருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் பத்து இலட்சம் பேர் இந்த முடிவை எடுக்கிறார்கள். தற்கொலை செய்வது சட்டவிரோதமான அல்லது தடை செய்யப்பட்ட சமூகங்களில் கூட மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தற்கொலை செய்ய நினைக்கும் பலர் வேறு வழியேதும் இருப்பதாக தெரியவில்லை எனக் கருதுகின்றனர். அந்தக் கணத்தில் மரணம் மட்டுமே தீர்வாக அவர்களுக்குத் தெரிகிறது. மேலும் அவர்களது தற்கொலை உணர்வுகளின் தீவிரத்தை மிகவும் கீழாக மதிப்பிட்டு விடக்கூடாது. அவை உண்மையானவை, சக்தி வாய்ந்தவை மற்றும் உடனடியானவை.
ஆனால் இவையும் கூட உண்மை:
  • ·         தற்காலிக பிரச்சினைக்கான நிரந்தர முடிவாக பெரும்பாலும் தற்கொலை அமைகிறது
  • ·         நாம் மனஅழுத்தத்திலிருக்கும் போது விஷயங்களை அந்தக் கணத்தின் குறுகிய மனப்பான்மையோடே நாம் பார்க்கிறோம். ஒரு வாரம் அல்லது ஒருமாதத்திற்கு பிறகு, விஷயங்கள் முற்றிலும் மாறுபட்டுத் தோன்றும்
  • ·         தற்கொலை செய்து கொள்வது ஒரு சமயத்தில் நினைத்த பலர் இப்போது தாங்கள் உயிரோடு இருப்பதற்காக மகிழ்கின்றனர் - தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பவில்லை வேதனையை தீர்க்கவே விரும்பினோம் - என்று அவர்கள் கூறினர்
    •  

நமது வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்ற நாம் விரும்புவதற்கும் நமக்கு அமைந்துள்ள வாழ்க்கைக்கும் இடைப்பட்ட வித்தியாசம் தான் மன அழுத்தத்திற்கக் காரணமாக அமைகின்றது. இந்த இடைவெளி கூடக்கூட மன அழுத்தத்தின் பரிமாணம் கூடிக்கொண்டே போகிறது.தற்கால வாழ்க்கை முறையினால் ஏற்படும் மன அழுத்தம் பெரும்பாலானவர்களால் சமாளிக்க முடிகின்றது

இரக்கமற்று மீண்டும் மீண்டும் தோற்கடித்துக் கொண்டே இருக்கும் வாழ்க்கையை பழிவாங்குவதற்கான இறுதி முயற்சியாய் மனிதர்கள் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார்களா? சாவைத் தீர்மாணிக்கும் கணங்கள் வெகு சொற்பமாய் இருந்தபோதும் எளிதில் கடந்து விட முடியாத தொலைவாய் நீள்கின்றன. மரணத்தை அதன் வாசலிலேயே சந்திக்கவும் ஓர் அசாத்திய தைரியம் தேவைதான் இல்லையா?

"தற்கொலை என்பது கோழைத்தனம்" " கோழைகள் எடுக்கும் துணிச்சலான முடிவு" என்றெல்லாம் வக்கணையாய்ப் பேசிக் கொண்டாலும் அந்தக் கணங்களை நேரடியாய்ச் சந்திக்க நேர்கையில் எல்லோரிடமும் மிஞ்சுவது எதுவும் கையாலாகாத இயலாமை மட்டுமே. இத்தனை குரூரங்களுக்கு மத்தியில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

மன அழுத்தம்தான் மூல காரணம்

பெரும்பாலான மக்கள் அவர்களது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தை உணர்கின்றனர். ஆனால் சிலருக்கு இந்த உணர்வுகள் கடுமையானதாகவும், தற்கொலை செய்யும் அளவிற்கு அமைந்து விடுகிறது.
இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம்.  எல்லா துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது.
சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த்தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்தனைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்தகைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன.
மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல்லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க்கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து கொள்ளல் இல்லாத சூழலில் உருவாகும் மன அழுத்தம், சாதீய, மத, இன ரீதியாக அழுத்தமான சூழலுக்கு உள்ளாகும் பொது மக்கள். என எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும், அல்லது எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம் களையப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
மன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகள் எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாதவர்கள், அவர்கள் எதையும் ஆனந்தத்துடன் பெற்றுக் கொள்ளும் தன்மையுடையவர்கள் எனவே அவர்களால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிகிறது, ஆனால் பெரியவர்கள் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதும், கிடைப்பதில் திருப்தி பெறாத நிலையையும் கொண்டிருப்பதால் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள்.  சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, தேர்வு, வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணங்களும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.

பெண்களுக்கு வேலை, குடும்பம் என இரட்டை அழுத்தமான சூழல்கள் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதை சரியான முறையில் கையாள குடும்ப சூழல் அமைதல் அவசியம்


குடும்பங்களில் பிரச்சனைகள் வருவது சகஜம். கணவன் மனைவியரிடையே பிரச்சனை வரும்போது உன்னால் தான் வந்தது என்று பழியை மாறி மாறி சுமத்தாமல் நமக்கு பிரச்சனை இருக்கிறது எப்படி தீர்வு காண்பது எனும் கண்ணோட்டத்தில் பேச வேண்டும் என்கிறான் பிரபல அமெரிக்க உளவியலாளர் வில்லார்ட் எஃப் ஹார்லே.
மன அழுத்தத்தை சூழ்நிலைகள் பத்து விழுக்காடும் நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம் என்பது தொன்னூறு விழுக்காடும் நிர்ணயிக்கின்றன என்கிறார் சார்லஸ் ஸ்விண்டால். எதையும் எதிர்கொள்ளும் மனநிலை கொண்டவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும் காரணம் இது தான்.

எத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொண்டால் பிரச்சனைகள் பல காணாமல் போய்விடும். நல்ல நகைச்சுவை உரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். தசைகளை இறுக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நுரையீரலுக்கு சுத்தமான காற்றை கொண்டு செல்லும் எனவே மன அழுத்தத்தைக் குறைக்க சிரியுங்கள் என்கிறார் மனோ தத்துவ நிபுணர் லீ பெர்க்.
-கனிமொழி கூறியது போல 


" அகால முடிவுகள் என்ற செய்திகளோடு

விடியும் நாள்களை

வாழவும் முடியவில்லை
வாழாதிருக்கவும் முடியவில்லை"
                                                                                                       




பின்குறிப்பு :-
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாளிதழ்களிலும், இதர அச்சு ஊடகங்களிலும், சுவர் விளம்பரங்களிலும், மற்றும் தொலைக்காட்சிகளிலும் மன அழுத்தப் பிரச்சினைகளுக்கான காரணங்களும், தீர்ப்பதற்கான வழிவகைகளும் சொல்லப்படுகின்றன ,ஏன் நாம் மட்டும் சும்மா இருக்கனும் நம்ம கடமைக்கு ஒன்னு  போடுவமேனு போட்டதுதானுங்க ,
மன அழுத்தத்திற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கின்றன
பதிவை படிச்சிட்டு சீரியஸா எடுத்துக்காதீங்க அப்புறமா உங்க   தற்கொலைக்கு நான்தான் காரணம்னு சொல்லப்பிடாது .ஆமாம் சொல்லிப்புட்டேன்   





1 comment:

  1. முதல்ல பின்குறிப்ப படிச்சிட்டுதான் பதிவ படிச்சேன்..இருந்தாலும் பதிவ சீரியஸாதான் எடுக்க வேண்டி இருக்கு..(பயப்படாதீங்க தற்கொலைலாம் பண்ணிக்க மாட்டேன்)..

    தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete